நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிந்து அனைவரும் வெளியே வந்தபோது, அந்த பள்ளிக்கு எதிரே உள்ள தெருவில் மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து மோதிக்கொண்டனர்.
அதில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் சிலர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவனை குத்தி விட்டனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் பிளஸ்-2 படித்து வந்தவர்கள் என்பதும், புளூடூத் ஸ்பீக்கர் கொடுக்கல்-வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில், மோதல் சம்பவம் நடந்ததாகவும் தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை, சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து பரப்பினர். இதனால் மாணவர்கள் மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments