ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. அந்த வாலிபர் கேட்டரிங் படிப்பை முடித்து விட்டு வெளிநாடு செல்ல முயற்சி செய்து வந்தார். இந்நிலயில் இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. முதலில் இருவீட்டாரின் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், காதலர்கள் வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையென்றால் ஒன்றாகவே சாவோம் என்று தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். இதனால், வாலிபரின் பெற்றோர் மனமிறங்கி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர். ஆனால், இளம்பெண்ணின் பெற்றோர் ஒரு மாதம் கழித்து முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மாறாக இளம்பெண்ணுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதாவது, கோவைக்கு சென்று அங்கேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து தன்னுடைய மகளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். காதலனின் நினைவாக இருந்த அந்த பெண், கணவனுடன் சேர்ந்து வாழவில்லை. மேலும் கணவர் வீட்டாரிடமும் பேசவில்லை.
இதற்கிடையே கணவர் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண், மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை அறிந்த மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களுடைய மகளை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.
இந்த நிலையில் அந்த பெண் மீண்டும் ஆரல்வாய்மொழிக்கு வந்தார். வந்த இடத்தில் காதலனை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த புதுப்பெண் திடீரென மாயமானார். மேலும் காதலனையும் காணவில்லை. புதுப்பெண், காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவனை உதறி விட்டு புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
0 Comments