கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் உயர் ரக இறால் மீன்களும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கணவாய் மீன்களும், அக்டோபர் மாதம் வாளை மீன்களும் சீசனாக இருந்து வருகிறது. தற்போது குளிர்கால சீசன் உள்ளது. இந்த சீசனில் தோடு எனப்படும் சிப்பி மீன்கள் எடுக்கப்படுவது வழக்கம். சிப்பி மீன்கள் கடல் பாறைகளில் கூட்டம், கூட்டமாக ஒட்டியவாறு இருக்கும். சிப்பி சுவையான கடல் உணவுகளில் ஒன்று சிப்பி மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சிப்பி மீன்களை கறி வைத்தும், பொரித்தும் சாப்பிடுகிறார்கள். முட்டம், கடியப்பட்டணம் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது .மீனவர்கள் கட்டுமரங்களில் சென்று, முகத்தில் கண்ணாடி கவசம் அணிந்து, கடல் பாறைகளில் ஒட்டிஇருக்கும் சிப்பி மீன்களை சேகரிப்பார்கள்.
குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் தான் சிப்பி மீன்களின் சீசன். சந்தைக்கு விற்பனைக்கு வந்த 100 எண்ணம் கொண்ட சிப்பி மீன்கள் 300 முதல் 400 வரை விற்கப்படுகிறது. இதனால் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிப்பி மீன்களுக்கு கடந்த சில வருடங்களாக கேரளாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. மீன் சந்தை,ஓட்டல்கள் மற்றும் மதுபார்களிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் சிப்பி மீன்களை வாங்க கேரள வியாபாரிகள் குமரி மாவட்டத்துக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
0 Comments