புதுக்கடை அருகே வேங்கோடு மேலக்கோட்டவிளையை சேர்ந்தவர் மரிய அருளப்பன். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகளின் பெயர் அஜீஸ் சஜிலின் லதா (வயது 17). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் அரசபுரசலாக அஜீஸ் சஜிலின் லதாவின் பெற்றோருக்கு தெரிய வரவே. உடனே, அவர்கள் தங்களுடைய மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மகளை கண்டித்ததாகவும் தெரிகிறது.
படிக்க வேண்டிய வயதில் உனக்கு படிப்பு மட்டுமே முக்கியம், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால், அஜீஸ் சஜிலின் லதாவால் காதலை மறக்க முடியவில்லை. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால்,அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த புதுக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜிஸ் சஜிலின் லதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments