ஏமன் நாட்டில் இருந்து தப்பிய குமரி மீனவர்களை மீட்குமாறு  குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு!

ஏமன் நாட்டில் இருந்து தப்பிய குமரி மீனவர்களை மீட்குமாறு குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு!

in News / Local

ஏமன் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா வந்து கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் 9 பேரின் குடும்பத்தினர், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ஆல்பிரட் நியூட்டன் (வயது 35), எஸ்கலின் (29), வினிஸ்டன் (47), பெரியகாடு பகுதியை சேர்ந்த விவேக் (33), மணக்குடியை சேர்ந்த சாஜன், குளச்சலை சேர்ந்த சகாயம் ஜெகன் (28), நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் கேரள மாநில மீனவர்கள் 2 பேர் என மொத்தம் 9 மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏமன் நாட்டில் அரேபிய முதலாளியால் மீன்பிடி வேலைக்காக பணி அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அந்த அரேபிய முதலாளி மீனவர்களுக்கு கூறியபடி அவர்களுக்குரிய மீன்பிடி பங்குத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை உணவுகூட வழங்காமல் மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மீனவர்களை அனைத்து நாட்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வற்புறுத்தியுள்ளனர்.

எனவே 9 பேரும் ஏமன் நாட்டில் இருந்து தப்பி கடந்த 19-ந் தேதி அரேபிய முதலாளியின் விசைப்படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்கு பயணத்தை தொடங்கினர். இதனால் கடந்த 9 நாட்களாக மீனவர்கள் குடும்பத்தாருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. இது அவர்களுடைய குடும்பத்தார் இடையே அச்சத்தை அதிகரித்திருந்தது.

இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி அதிகாலை மீனவர்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு நாங்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்து விட்டோம், லட்சத்தீவு கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு போதுமான டீசல் இருக்குமேயானால் இரண்டு அல்லது 3 நாட்களில் கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகம் அல்லது தமிழகத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்வோம் என நம்புகிறோம். நாங்கள் கடந்த சில நாட்களாக போதிய உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்து கொண்டிருக்கிறோம், எங்களை உடனடியாக மீட்டு பாதுகாப்பாக கரை சேர்க்க அரசு அதிகாரிகள் வழியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு கடந்த 30 மணி நேரத்துக்கும் மேலாக குடும்பத்தாருடன் அவர்கள் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் 9 பேரையும் அரசு அதிகாரிகள் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். இதேபோல் வெளிநாடுகளில் அரேபிய முதலாளிகளால் ஏமாற்றப்பட்டு துன்புறுத்தப்படுகின்ற மீனவர்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும்.

அரேபிய முதலாளிகளிடம் இருந்து மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய மீன்பிடி பங்கை பெற்றுத்தர வேண்டும். வெளிநாட்டில் மீன்பிடித் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ள அனைத்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களின் நலம் காக்க ஒவ்வொரு இந்திய தூதரகத்தில் ஒரு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழக, கேரள முதல்-அமைச்சர்கள், மத்திய மீன்வளத்துறை மந்திரி ஆகியோருக்கும் இதே கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top