மார்த்தாண்டம் நட்டாலம் சேரோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் காட்வின் டோனி (வயது 28). இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆஷா (24). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நேற்று காலை காட்வின் டோனி வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மார்த்தாண்டம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே அழகர் அம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக காட்வின் டோனி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு, அக்கம் பக்கத்தினர் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று காட்வின் டோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த காட்வின் டோனியின் மனைவி ஆஷா மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், காட்வின் டோனி உடலை பார்வையிட்டு, அவருடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அரசு பஸ் டிரைவர் காப்புக்காட்டை சேர்ந்த கருணாகரனை (49) கைது செய்தனர்.
திருமணமான 3 மாதத்தில் காட்வின் டோனி பலியான சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவருடைய உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காட்வின் டோனி உருவ படத்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
0 Comments