பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை நேரலையில் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வசதியாக காவல்துறைக்கு நவீன கேமராக்கள் விரைவில் வாங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கத்தினர், தமிழ் இயக்கத்தினர், சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர். சில நேரம் முற்றுகை, ரயில் மறியல், உள்ளிருப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என போராட்டத்தின் வடிவம் மாறும். அதுபோன்ற நேரங்களில் போராட்டக்காரர்கள் மீது சூழ்நிலைக்கு தகுந்தவாறு போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
தமிழகத்தில் 2017-ல் அனுமதி பெற்று 1,093 போராட்டங்களும் அனுமதியின்றி 1,383 போராட்டங்களும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டங்களை சமாளிக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, ரோந்து மற்றும் கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்வது போன்ற பணிகளில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றத்தடுப்பு, குற்ற வழக்குகளில் துப்புதுலக்குவதில் பின்னடைவு ஏற்படுவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து இருந்த இடத்தில் இருந்தபடியே போராட்டங்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவுகளை பிறப்பிக்கவும் நவீன கேமராக்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவீன கேமராக்கள் வாங்கப்பட உள்ளன. இந்த கேமராவை போராட்டம் நடைபெறும் இடம் அல்லது அதன் அருகில் வைத்தால் போதும் அதன் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஒலி, ஒளி-யுடன் துல்லியமாக கேட்கவும் பார்க்கவும் முடியும். Wifi வசதியும் இதில் இருக்கும்.
0 Comments