கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே உள்ள பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் அருளப்பன் (49). இவர் கேரள மாநிலம் கண்ணூர் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி முகாமில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார். கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்து கேரள அரசு பஸ்ஸில் ஊருக்குத் வந்துகொண்டிருந்தார்.. திருவனந்தபுரம் வரும் வழியில் புதியகாவு பகுதியில் அருளப்பன் பயணித்த பேருந்தும், வைக்கோல் ஏற்றி வந்த டெம்போவும் லேசாக மோதின.
இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரும், டெம்போ ஓட்டுநரும் வாகனங்களை நிறுத்தி விட்டு மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ் மற்றும் டெம்போ ஓட்டுநர்களுக்கும் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டது. ரோட்டில் பிரச்சனை தொடர்ந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் கீழே இறங்கி கும்பலாக சண்டையை வேடிக்கை பார்த்தனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் அருளப்பனும் கீழே இறங்கி இருதரப்பினரிடமும் சமாதானம் பேசினார்.
அப்போது காய்கறி ஏற்றி வந்த மற்றொரு டெம்போ வைக்கோல் பாரத்துடன் நின்றுக் கொண்டிருந்த டெம்போவின் பின் பகுதியில் வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் வைக்கோல் லோடுடன் நின்ற டெம்போ முன்பக்கமாக நகர்ந்தது. அதில் டெம்போவின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்த அருளப்பன் உள்ளிட்டவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த எஸ்.ஐ.அருளப்பன்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேறு சிலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
0 Comments