மயிலாடி அருகே பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கலைமணி (வயது 33). இவர், சுசீந்திரம் அருகே பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் (35), சிங்களேயர்புரியை சேர்ந்த டேவிட் (40) ஆகியோர் மூலமாக கடன் வாங்கி ஆட்டோ வாங்கினார். இதற்காக 2 பேரிடமும் தவணை முறையில் பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதமாக கலைமணி தவணை முறையில் பணம் கட்டாமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், டேவிட் சிலருடன் சேர்ந்து கலைமணியை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கலைமணி தம்பி ராமகிருஷ்ணன் (27) மட்டும் தனியாக இருந்தார். அவர் பெயிண்டராக உள்ளார்.
கடத்தி சிறைவைப்பு :
பின்னர் கலைமணி கிடைக்காத ஆத்திரத்தில், அவர்கள் ராமகிருஷ்ணனை கடத்தி சென்று முருகனின் வீட்டில் சிறை வைத்தனர். மேலும் கலைமணி எங்கு இருக்கிறார் என கேட்டு அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சந்திரன் வழக்குபதிவு செய்து டேவிட், பால் கிணற்றான்விளை சங்கரலிங்கம் (43), நைனாபுதூரை சேர்ந்த முருகேசன் (45), பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் அமுதன் (19) ஆகிய 4 பேரை கைது செய்தார்.
தலைமறைவான முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள். கடத்தல் வழக்கில் கைதான சங்கரலிங்கம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய தி.மு.க. தொண்டரணி துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை கடத்தி சிறை வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments