கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று என்ற ஊரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்.இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி இவர் பணியில் இருந்த போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு அங்கு வந்துள்ளார். அங்கும் இங்கும் ஓடித் திரிந்த அவர், திடீரென தேவாலயம் முன் நடனமாடியுள்ளார்.
இதைப் பார்த்த காவலாளி சுந்தர்ராஜ், மர்மநபரை எச்சரித்துள்ளார். காவலாளியை நோக்கிச் சென்ற அந்த நபர், திடீரென அவரைத் தாக்கி கீழே தள்ளி, பின்னர் பெரிய கல்லைத் தூக்கி சுந்தர்ராஜின் வயிற்றில் போட்டுள்ளார். மறுபடி மார்பு மற்றும் தலையிலும் கல்லைத் தூக்கிப் போட்ட மர்மநபர் பின்னர் நிர்வாணமாக தேவாலயம் முன் நின்று கொண்டார்.
காவலாளியை தாக்கிய கல்லை தேவாலயம் முன் சிறிது நேரம் வைத்த அவர், புதருக்குள் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தர்ராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதே மர்மநபர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடியையும் உடைத்து விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சாலையில் நடந்து சென்ற பொதுமக்களையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments