குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று வட்டக்கோட்டை. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டக்கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வட்டக்கோட்டைக்குள் நுழைய இதுவரை கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படாமல் இருந்த நிலையில், மே மாதத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நுழைவு கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். இதே போல வட்டக்கோட்டையை பார்வையிட வந்த உள்ளூர் மக்களிடமும் கட்டணம் கேட்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த உள்ளூர் மக்கள் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்கள் இலவசமாக சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் வட்டக்கோட்டை முன் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அஞ்சுகிராமம் போலீசார் அங்கு விரைந்து சென்று மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து சென்றனர். இந்த பிரச்சினையை கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments