குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய 3 தாலுகாக்களில் ரப்பர் அதிகளவில் சாகுபடி தொடங்கி 115 ஆண்டுகள் கடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு. அதுபோல இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தின் பிரதான தொழில்களின் ஒன்று ரப்பர் பால் வெட்டுதல். 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் அரசு மற்றும் தனியாரால் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. ரப்பர் பால் வடித்தல், இதனை சார்ந்த தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் ரப்பர் விலை வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவிலும் ரப்பர் விலை வீழ்ச்சி அடைந்தது.
இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி சராசரியாக 250 முதல் 300 டன் வரை ரப்பர் பால் உற்பத்தி இருக்கும்.தற்போது மழை காரணமாக சில இடங்களில் மட்டும் பால் வெட்டும் பணி நடைபெறுகிறது. குமரி முழுவதும் கடந்த 6 மாதங்களாக மழை நீடித்து வருகிறது. இடையில் சில நாட்கள் மட்டுமே மழை இல்லாமல் இருந்தது. தற்போது இரவு நேரம் மற்றும் மதியத்திற்குமேல் என தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் மரங்கள் முழுவதுமாக மழையில் நனைந்து விடுவதனால் பால்வெட்டும் தொழில் அடியோடு முடங்கி போய் உள்ளது .
பல பெரிய எஸ்டேட்டுகளில் மழை நேரத்தில் பால்வெட்டுவதற்கு வசதியாக, ரப்பர் மரத்தை சுற்றிலும் பிளாஸ்டிக் கவர்களால் குடைபோல் ஏற்படுத்தி வைப்பது வழக்கம். ஆனால் கனமழைக்கு அது தாக்குப்பிடிக்காது . இதனால் முற்றிலுமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது. இதன் மூலம் இந்த தொழிலை நம்பி இருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து அவதிப்படுகின்றனர்.
0 Comments