குமரி மாவட்டத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்துக்கு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள கிராமபுற பெண்கள் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஏழை பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் தமிழக அரசு 2020-21-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தலா ஒரு பெண் பயனாளிக்கு 25 அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் ஒரு யூனியனுக்கு 400 பயனாளிகள் வீதம் 9 யூனியன்களுக்கு 3 ஆயிரத்து 600 பெண் பயனாளிகளுக்கு அசில் இன நாட்டு கோழிகள் வழங்கப்பட உள்ளது.
எனவே அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் இந்த திட்டத்தின்கீழ் நாட்டுகோழிகள் வளர்க்க விரும்பினால் அந்தந்த கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 30 சதவீத பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள், அரசின் விலையில்லா கறவை பசு, வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பெண் பயனாளிகள் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்து உள்ளார்.
0 Comments