கருங்கல் பகுதியில் செயல்படும் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கருங்கல் போலீசில் வங்கி மேலாளர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கருங்கல் ஆர்.சி. தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 58) மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்
அவர்கள் கூறியிருப்பதாவது:-
கருங்கல் பகுதியில் செயல்படும் வங்கி கிளை ஒன்றில் எங்களுக்கும், எங்களது குடும்பத்தினர் பெயரிலும் சேமிப்புக் கணக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கி மேலாளர் எங்களையும், எங்களது குடும்பத்தினரையும் வங்கிக்கு வருமாறு அழைத்தார். அங்கே சென்றபோது உங்களது பெயரில் பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே உடனே நகைகளை மீட்க வேண்டும் எனக்கூறி உள்ளார். அதற்கு நாங்கள் நகை எதுவும் அடகு வைக்கவில்லை எனக்கூறினோம்.
ஆனால் வங்கி மேலாளர் அப்படியானால் நான் சொல்வதைப்போல் எழுதித்தாருங்கள். உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது எனக்கூறினார். அதன்படி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு வேண்டி நாங்கள் நகைகளை அடகு வைத்ததாக எழுதி வாங்கினார். இதற்கிடையே கருங்கல் போலீஸ் நிலையத்தில் மேற்கண்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளரும் 34 பேரும் சேர்ந்து போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக வங்கி மேலாளர் புகார் செய்துள்ளதாக அறிந்தோம்.
மேற்கண்ட நகைகளுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே இதுகுறித்து விசாரித்து இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான சம்பவத்தில் இருந்து எங்களை விடுவிக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments