கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 537 மி.மீ.மழை பெய்கிறது.அதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனிற்காலத்தில் 332 மி.மீ மழையும் பதிவாகிறது. குமரிமாவட்டத்தில் ஒரு ஆண்டு சராசரி மழை 1465மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பிப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது.
குமரியின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.அதே போல வருடம் முழுவதுமே குமரி மாவட்டத்தில் மழை பெய்வது வழக்கம். இதன் காரணமாக இங்குள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் காணப்படும். இதனால் விவசாய பணிகளும் வேகமாக நடைபெறும். 77 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையில் இன்று காலை நிலவரப்படி 73.55 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 306 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து 606 கனஅடி தண்ணீரும், சிற்றாறு-1 அணையில் இருந்து 200 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றாறு-1 ஆகிய 3 அணைகளில் இருந்தும் மொத்தம் 1501 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. குமரி மாவட்டத்தில் இயல்பாக 1167 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு 890 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாக இருந்தது. இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் அளவை காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 10 மாதத்தில் மட்டும் 1232 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருப்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாய பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
0 Comments