எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று  வெளியீடு - குமரி மாவட்டத்தில் 98.08 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியீடு - குமரி மாவட்டத்தில் 98.08 சதவீதம் தேர்ச்சி

in News / Local

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி, 29-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களில் 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 872 மாணவர்களும், 11 ஆயிரத்து 877 மாணவிகளுமாக மொத்தம் 23 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 11 ஆயிரத்து 513 மாணவர்களும், 11 ஆயிரத்து 781 மாணவிகளுமாக மொத்தம் 23 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தை போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.98. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 99.19. ஒட்டுமொத்த மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.08 ஆகும்.

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 7,825 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 7666 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த கல்வி மாவட்டத்தில் தமிழ் பாடத்தேர்வு எழுதிய 7,825 பேரில் 7,700 பேர் தேர்ச்சி (98.40 சதவீதம்), ஆங்கில பாடத்தேர்வில் 7,714 பேர் தேர்ச்சி (98.58 சதவீதம்), கணித பாடத்தேர்வில் 7,723 பேரும் (98.70 சதவீதம்), அறிவியல் பாடத்தேர்வில் 7,815 பேரும் (99.87 சதவீதம்), சமூக அறிவியல் பாடத்தேர்வில் 7,725 பேரும் (98.72 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கணிதம் பாடத்தில் 10 பேரும், அறிவியல் பாடத்தில் 11 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 46 பேரும் ஆக மொத்தம் 67 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தக்கலை கல்வி மாவட்டத்தில் 6,521 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 6,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் தமிழ் பாடத்தில் 6,439 (98.74 சதவீதம்) பேரும், ஆங்கில பாடத்தில் 6,451 (98.93 சதவீதம்) பேரும், கணித பாடத்தில் 6,458 (99.03 சதவீதம்) பேரும், அறிவியல் பாடத்தில் 6,504 (99.74 சதவீதம்) பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 6,450 (98.91 சதவீதம்) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3 பேர் கணித பாடத்திலும், 2 பேர் அறிவியல் பாடத்திலும், 35 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் ஆக மொத்தம் 40 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

குழித்துறை கல்வி மாவட்டத்தில் 4,836 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4,750 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் 4,775 (98.80 சதவீதம்) பேரும், ஆங்கில பாடத்தில் 4,778 பேரும் (98.80 சதவீதம்), கணித பாடத்தில் 4,767 பேரும் (98.57 சதவீதம்), அறிவியல் பாடத்தில் 4,773 பேரும் (98.70 சதவீதம்), சமூக அறிவியல் பாடத்தில் 4,832 பேரும் (99.92 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மலையாள பாடத்தேர்வு எழுதிய 3 பேரில் 3 பேரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 2 பேர் கணித பாடத்திலும், 4 பேர் அறிவியல் பாடத்திலும், 21 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் ஆக மொத்தம் 27 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 4,567 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4,465 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தேர்வில் 4,480 பேரும் (98.29 சதவீதம்), ஆங்கில பாடத்தில் 4,493 பேரும் (98.38 சதவீதம்), கணித பாடத்தில் 4,485 பேரும் (98.20 சதவீதம்), அறிவியல் பாடத்தில் 4,559 (98.82 சதவீதம்) பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4,510 (98.75 சதவீதம்) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கணிதத்தில் ஒருவரும், அறிவியல் பாடத்தில் 6 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 9 பேருமாக மொத்தம் 16 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மலையாள பாடத்தேர்வு எழுதிய 9 பேரில் 9 பேரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 737 பேர் தமிழ் பாடத்தேர்வு எழுதியதில் 23 ஆயிரத்து 394 பேரும் (98.55 சதவீதம்), 12 பேர் மலையாள பாடத்தேர்வு எழுதியதில் 12 பேரும் (100 சதவீதம்), ஆங்கில பாடத்தேர்வில் 23 ஆயிரத்து 436 பேரும் (98.68 சதவீதம்), கணித பாடத்தில் 23 ஆயிரத்து 433 பேரும் (98.67 சதவீதம்), அறிவியல் பாடத்தில் 23 ஆயிரத்து 651 பேரும் (99.59 சதவீதம்), சமூக அறிவியல் பாடத்தில் 23 ஆயிரத்து 517 பேரும் (99.02 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 16 பேர் கணித பாடத்திலும், 23 பேர் அறிவியல் பாடத்திலும், 111 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் என 150 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டம் கடந்த ஆண்டு 98.07 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4-வது இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு 0.01 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் மாநில அளவில் குமரி மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் மாணவ- மாணவிகள் வந்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. படிவங்கள் வாங்குவதற்காக அந்தந்த பள்ளிகளில் மாணவ- மாணவிகளும் அவர்களுடைய பெற்றோரும் ஆர்வத்துடன் குவிந்திருந்ததை காண முடிந்தது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரிய- ஆசிரியைகளை கொண்டு விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top