மார்த்தாண்டம் அருகே குழித்துறை கல்லுக்கெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் சுபின் (வயது 18), கல்லூரி மாணவர். இவர் கடந்த 1-ந் தேதி தனது நண்பர்கள் சிலருடன் குறும்பனை பகுதிக்கு சென்றார். அங்கு கடலில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்த போது சுபினை ராட்சத அலை இழுத்து சென்றது. அவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், அப்பகுதி மீனவர்களும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 3-வது நாளாக தேடும் பணி நடந்தது. இதில் குறும்பனை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 5 வள்ளங்களில் ஆழ்கடலுக்கு சென்று தேடினர். அப்போது, சுபினின் உடல் ஆழ்கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் உடலை மீட்டு வள்ளத்தில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். உடலை பார்த்ததும் கரையில் கூடி நின்ற உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர்.
மேலும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், குறும்பனை பங்குத்தந்தை காஸ்பர், துணை பங்குத்தந்தை ஆன்டனி ஆகியோர் கடற்கரைக்கு சென்று உடலை பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments