நாகர்கோவில், இந்து கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்!

நாகர்கோவில், இந்து கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்!

in News / Local

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ–மாணவிகள் மே மாதம் 2–ந் தேதி (அதாவது நேற்று) முதல் 31–ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இணையதள வசதி இல்லாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், குமரி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு வசதியாக நாகர்கோவில் இந்து கல்லூரியில் 25 கம்ப்யூட்டர் சாதனங்களுடன் சேர்க்கை சேவை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் மூலமாக என்ஜினீயரிங் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது. இங்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார், உதவி ஒருங்கிணைப்பாளர் மீனா ஆகியோர் செய்துள்ளனர். மேலும் இந்த மையத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியாளர்கள் 15 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு உதவியாக இந்து கல்லூரி முதுநிலை மாணவ–மாணவிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்நாளான நேற்று இந்த மையத்துக்கு காலையிலேயே ஏராளமான மாணவ–மாணவிகள் குவிந்தனர். மதியத்துக்குப் பிறகு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதள சர்வர் இணைப்பில் பிரச்சினை ஏற்பட்டதால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு காலதாமதம் ஆனது. எனினும் நேற்று மாலை வரை 60–க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர்.

என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் மாணவ–மாணவிகள் பிளஸ்–2 மதிப்பெண் விவரம், சாதிச்சான்றிதழ் ஜெராக்ஸ், செல்போன், வங்கி ஏ.டி.எம். கார்டு அல்லது பொதுப்பிரிவினர் ரூ.500–க்கான டி.டி.யும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250–க்கான டி.டி.யும் எடுத்து கொண்டு வர வேண்டும். மாணவர்கள் ஆன்லைன் பதிவேற்றத்தின்போது கொடுக்கும் செல்போன் எண்ணுக்குரிய செல்போனை கையில் வைத்திருக்க வேண்டும். அந்த செல்போனில் லாக்–இன் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு போன்ற விவரங்கள் வரும்.

என்ஜினீயரிங் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31–ந் தேதி கடைசி நாள் ஆகும். குமரி மாவட்டத்தில் தனியார் ஆன்லைன் மையம் மூலம் விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கலந்தாய்வுக்கும் நாகர்கோவில் இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்துக்குத்தான் வரவேண்டும் என சேவை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top