நாகர்கோவில் ஒழுகினசேரி சந்தணமாரி அம்மன் தெருவில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன் 78 இவரது மனைவி பங்கஜம் 67 இவர்களுக்கு மாலா 48 மைதிலி 47 ஆகிய மகள்களும் இருந்தனர்.
இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளாமல், பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
தச்சு வேலை செய்த வடிவேல் முருகனின் வருவாயைக் கொண்டுதான் அந்த குடும்பமே ஜீவனம் நடத்தி வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவேல் முருகனின், காலில் காயம் ஏற்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த குடும்பமே வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வடிவேல் முருகன் நேற்று மரணமடைந்துள்ளார்.
வடிவேல் முருகனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாத நிலையில், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதற்காக 3 பேரும் சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் இளைய நயினார் குளத்தில் தற்கொலை செய்துகொள்ளுவதற்காகக் குதித்துள்ளனர்.
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பங்கஜம்
அவர்கள் குளத்தில் குதித்தது அதிகாலை நேரம் என்பதால், அப்போது அந்த பகுதியில் வாக்கிங் சென்ற சிலர் குளத்தில் மூன்று பேர் தத்தளிப்பதைப் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் அங்கு சென்ற போலீஸார் மூன்று பேரையும் மீட்டனர்.
அதில், வடிவேல் முருகனின் மனைவி பங்கஜம் மற்றும் மூத்த மகள் மாலா ஆகியோர் மரணமடைந்தனர். இளைய மகள் மைதிலி என்ற சச்சு மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
0 Comments