தக்கலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷ பொடியை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தக்கலை அருகே பத்மநாபபுரம் வாழவிளை பகுதியை சேர்ந்த ரெதீஷ் (வயது 23), கொத்தனார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த பெனிஷா (24), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ரெதீஷ் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெனிஷா, நீண்ட நேரம் செல்போனில் சிலருடன் பேசி வந்தாக தெரிகிறது. இதனை அறிந்த ரெதீஷ், இது தொடர்பாக மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவு பெனிஷா, தனது வீட்டின் அருகே மறைவான பகுதியில் நின்று ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதனை கண்ட ரெதீஷ் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த நிலையில் பெனிஷா வீட்டில் வைத்திருந்த விஷ பொடியை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், இளம்பெண்ணை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெனிஷாவுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெனிஷா காதல் திருமணம் செய்து 4 ஆண்டுகளே ஆனதால், தக்கலை சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments