ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் சிறப்பு பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கும். இவை இன்று (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதே போல குமரி மாவட்டத்திலும் 5 லட்சத்து 34 ஆயிரத்து 489 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. மேலும் அரசு அறிவித்த ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக நாகர்கோவிலில் உள்ள அரசு குடோனில் இருந்து பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. பச்சரிசி மற்றும் சர்க்கரை மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆனால் கரும்புகள் மற்றும் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்கள் நேற்று மாலை வரை குடோனுக்கு வரவில்லை. எனினும் இன்று காலைக்குள் வந்து விடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
0 Comments