நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆன்டோ (வயது 35). இவர் காரவிளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளார்.
இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் குளச்சலில் இருந்து ஆசாரிபள்ளம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டை சந்திப்பு பகுதியில் அவர் கார் வரும்போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி டாரஸ் லாரி ஓன்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்தது. இரண்டும் வாகனங்களும் நேருக்குநேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் பீதி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்று விட்டார். இதில் போதகர் ஆரோக்கிய ஆன்டோ இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய படி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணிநேரம் போராடி இடிபாடுகளுக்குள் இருந்து ஆரோக்கிய ஆன்டோவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவான லாரியின் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, டிரைவர் களியக்காவிளையை சேர்ந்த அருண் (29) என தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments