அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம் சாமிதோப்பில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோஸ் செல்வராஜ், இணை பொதுச் செயலாளர் ராஜன், துணை பொதுச் செயலாளர் சத்தியசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பிறகு அறக்கட்டளை நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழக அரசின் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டசாமி குறித்து தவறான தகவல்கள் போடப்பட்டுள்ளது. இது அய்யாவழியை பின்பற்றும் பக்தர்களின் மனதை மிகவும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே புத்தகத்தில் போடப்பட்டுள்ள தவறான தகவல்களை தமிழக அரசு உடனடியாக நீக்கிவிட்டு, அய்யா வழியின் ஆகம நூலான அகிலத்திரட்டில் உள்ள கருத்துகளை மாணவர்களுக்கு பாடங்களாக வைக்க வேண்டும்.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த தவறுகள் சரி செய்யப்பட வில்லையெனில் தமிழகத்தில் உள்ள அனைத்து அய்யாவழி பக்தர்களையும் ஒன்று திரட்டி தமிழக அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
0 Comments