குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு!

in News / Local

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலையில் இருந்து நாள் முழுவதும் இதே நிலை தான் நீடித்தது.

இந்த மழையால் நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் கடந்த சில மாதங்களாக வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழையினால் ஜில்லென்ற சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தி இதமான உணர்வை அளிக்கிறது. குடிநீர் பற்றாக்குறைக்கு ஆளான பொதுமக்களும், நெல் நாற்றுகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட விவசாயிகளும், தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? குமரி மாவட்ட ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் எப்போது கரை புரண்டோடும்? என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர். அவர்களுக்கு இந்த மழை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாரல் மழையாக பெய்தாலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 33, பெருஞ்சாணி- 25.2, சிற்றார் 1- 49.2, சிற்றார் 2- 46, புத்தன் அணை- 24.6, மாம்பழத்துறையாறு- 40, பொய்கை- 19.4, முக்கடல்- 56, பூதப்பாண்டி- 25.8, களியல்- 53, கன்னிமார்- 37.4, கொட்டாரம்- 27.4, குழித்துறை- 74, மயிலாடி- 26.6, நாகர்கோவில்- 10.3, சுருளக்கோடு- 64.6, தக்கலை- 43, குளச்சல்- 24.6, இரணியல்- 49, பாலமோர்- 76.2, ஆரல்வாய்மொழி- 19.4, கோழிப்போர்விளை- 65, அடையாமடை- 63, குருந்தங்கோடு- 31.4, முள்ளங்கினாவிளை- 43, ஆனைக்கிடங்கு- 57.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை 6 மணிக்குப்பிறகு மாலை 5 மணி வரையிலான 11 மணி நேரத்தில் பேச்சிப்பாறை அணையில் 80 மி.மீ. மழை பதிவானதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மழையினால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 4 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 6 அடியாகவும், மாலை 5 மணி அளவில் 9 அடியாகவும் உயர்ந்தது. இதனால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. 25.20 அடியாக இருந்த பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று காலை 26.75 அடியாகவும், 5.50 அடியாக இருந்த சிற்றார்-1 அணை நீர்மட்டம் 5.74 அடியாகவும், 5.67 அடியாக இருந்த சிற்றார்-2 அணை நீர்மட்டம் 5.84 அடியாகவும் உயர்ந்திருந்தது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 41.99 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டமும் நேற்று உயர்ந்தது.

மாவட்டத்தின் சில இடங்களில் காற்றுடன் பெய்த மழையினால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில மரங்கள் சாய்ந்தன. மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்ததின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. நாகர்கோவில் நகரின் சில இடங்களில் தென்னை மட்டைகள் மின்கம்பிகளில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

கன்னிப்பூ சாகுபடி குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் எக்டரில் கன்னிப்பூ சாகுபடியை இந்த ஆண்டு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் நடப்பட்டிருந்த நெல்நாற்றுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மழை தொடங்கி விட்டதால் அந்த பாதிப்பு சரியாகி விடும். இதுவரை குருந்தங்கோடு வட்டாரம் பெரியகுளம் ஏலா பகுதியில் 200 எக்டர், பறக்கை பால்குளம் பகுதியில் 180 எக்டர், சுசீந்திரம் பகுதியில் 80 எக்டர் உள்பட மொத்தம் 500 எக்டர் பரப்பளவில் கன்னிப்பூ சாகுபடிக்கான நெல் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 200 எக்டர் பரப்புக்கான நெல் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top