நாகர்கோவிலில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது!

நாகர்கோவிலில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது!

in News / Local

நாகர்கோவில் கோட்டார் கரியமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 52), தச்சு தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், பொன்னி மற்றும் சுபா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். பொன்னிக்கு திருமணமாகி கோட்டார் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். சுபா ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யப்பன் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் நள்ளிரவில் அய்யப்பன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பார்த்த போது வீட்டில் அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். பின்னர் சம்பவம் பற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீசார் முதலில் அங்கு விரைந்து சென்று அய்யப்பனின் உடலை பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்த அய்யப்பனின் தலையில் 3 இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அய்யப்பனை யாரோ பயங்கரமாக அடித்துக் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் ஓராவும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பல இடங்களில் மோப்பம் பிடித்த ஓரா வேகமாக வெளியே ஓடியது. கரியமாணிக்கபுரம் சுடுகாடு வரை ஓடிய ஓரா பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து மோப்பம் பிடித்தது. அதன்பிறகு அங்குள்ள கோவில் முன் சுற்றி சுற்றி வந்த ஓரா மெயின் ரோட்டுக்கு சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இதற்கிடையே அய்யப்பனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “என் கணவர் கடந்த சில தினங்களாகவே மது குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டு வந்தார். இதே போல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் சண்டை போட்டுவிட்டு நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து நானும், என் மகளும் படுத்து தூங்கி விட்டோம். பின்னர் அதிகாலை 2 மணி அளவில் நான் எழுந்து பார்த்தேன். அப்போது அவர் தூங்கும் அறையில் உருவம் தெரிந்தது. எனவே அவர் வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார் என்று நான் நினைத்தேன். ஆனால் காலையில் அருகில் சென்று பார்த்த போது தான் அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது“ என்று அழுது கொண்டே கூறினார்.

இதனையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அய்யப்பனை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது மர்மமாக இருந்தது. எனினும் கிருஷ்ணவேணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏன் எனில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கிருஷ்ணவேணி கூறிய தகவல்கள் நம்பும்படியாக இல்லை. “என் கணவர் கீழே விழுந்து இறந்திருப்பார்“ என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார்.

எனவே கிருஷ்ணவேணியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது அய்யப்பனை அவருடைய மனைவியே கல்லால் தாக்கி கொன்றது தெரிய வந்தது. மது குடித்துவிட்டு தகராறு செய்த அய்யப்பன் திடீரென கல்லை எடுத்து வந்து கிருஷ்ணவேணியை தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அய்யப்பனை தள்ளிவிட்டார். எனினும் அவர் விடவில்லை. மீண்டும் கிருஷ்ணவேணியை தாக்க முயற்சி செய்தார்.

எனவே அய்யப்பனிடம் இருந்து கல்லை பிடுங்கிய கிருஷ்ணவேணி, அதே கல்லால் தன் கணவரை தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கம்பாலும் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இதில் படுகாயம் அடைந்த அய்யப்பன் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் போதையில் மயங்கியிருப்பார் என்று நினைத்துக்கொண்டு கிருஷ்ணவேணி தன் மகளுடன் சென்று தூங்க சென்றார். அதிகாலை 2 மணி அளவில் எழுந்து பார்த்தபோது அய்யப்பன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது அய்யப்பன் இறந்து கிடந்தார். இதனால் பதறிப்போன கிருஷ்ணவேணி செய்வதறியாது திகைத்தார்.

கொலை செய்தது வெளியே தெரிந்தால் போலீசில் சிக்கி கொள்வோமே என்று பயந்து போன கிருஷ்ணவேணி, தன் கணவர் கீழே விழுந்து இறந்திருப்பார் என்று அழுது புலம்பி நாடகமாடி உள்ளார். எனினும் அவரது நாடகம் அம்பலமாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கிருஷ்ணவேணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top