பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கணவர் கண் முன்னே, பெண் பலி!

பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கணவர் கண் முன்னே, பெண் பலி!

in News / Local

குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த லேபர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). இவர் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விமலா (43). இவர் பால்குளம் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு வின்சி, வினிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று காலையில் கணவன்- மனைவி இருவரும் இறச்சகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இறச்சகுளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் சென்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து ஞாலம் நோக்கி அரசு பஸ் வந்துகொண்டிருந்தது . பஸ் வருவதை கண்ட விஜயகுமார், மோட்டார் சைக்கிளை சாலையோரமாக திருப்பிய போது குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருந்து விமலா சாலையில் விழுந்தார். அப்போது, அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் விமலா . தன் கண் முன்னேயே மனைவி விமலா இறந்ததை பார்த்ததும் விஜயகுமார் கதறி அழுதார்.

தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான விமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே விபத்தை நேரில் கண்டு ஆத்திரமடைந்தனர் அப்பகுதி மக்கள் . ஒன்று திரண்டு குழாய் பதித்த பள்ளங்களை உடனே சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஒட்டி வந்த கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர்.

விபத்தில் விமலா இறந்த சிறிது நேரத்தில், அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சாலையில் உள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்புகளும் எற்படுவது வாடிக்கையாக உள்ளது எனஅந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top