மார்த்தாண்டம் அருகே லாரி மோதி பெண் பலி - ஓட்டுநர் கைது!

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி பெண் பலி - ஓட்டுநர் கைது!

in News / Local

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி பெண் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் பவுல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருடைய மனைவி அன்னம்மாள் (வயது 61). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அன்னம்மாள் வெட்டுமணியில் உள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் காப்புக்காட்டில் இருந்து வெட்டுமணிக்கு பேருந்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் ஆலயத்துக்கு செல்வதற்காக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அன்னம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்னம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் .

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான நாகர்கோவிலை சேர்ந்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top