தென்தாமரைகுளம் அருகே உள்ள தேரிவிளையை ேசர்ந்தவர் நாகலிங்க ராஜா(வயது 23), கட்டிட தொழிலாளியான இவரது . இவருடைய பெற்றோர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். இதனால், நாகலிங்கராஜா தனியாக தான் வசித்து வந்தார்.
நாகலிங்க ராஜாவும் அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமரேசனும் (23) இணைபிரியாத உயிர் நண்பர்கள். மேலும், தனக்கு தாய்-தந்தை இல்லாததால் நாகலிங்கராஜா எல்லா குடும்ப விஷயங்களையும் குமரேசனோடு கலந்து ஆலோசித்து செய்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு நாகலிங்கராஜா மது போதையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குமரேசனுடன் தகராறு செய்து அடித்து உதைத்துள்ளார். இதில் குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே, குமரேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தனது உயிர் நண்பனை அடித்து காயப்படுத்தி விட்டோமே என்ற மிகுந்த மனவருத்தத்தில் நாகலிங்கராஜா விஷம் குடித்து அப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை நாகலிங்கராஜா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகலிங்கராஜாவின் உறவினர் பொன்னுசாமி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கென்னடி வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
உயிர் நண்பனை தாக்கிய மன வருத்தத்தில் வாலிபர் தற்கொலை என்ற விபரீத முடிவை தேடி கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments