நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையோடு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த குடியுரிமை மசோதாவிற்கு 12ம் தேதி இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். இதனால் இந்த மசோதா சட்டமாகவும் இயற்றப்பட்டது.
இந்தக் குடியுரிமை மசோதா நாடாளுமன்ற அவைகளில் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதிலிருந்தே அசாம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது என மேற்கு வங்க முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப், கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களும் இந்த சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த முடியாது எனப் போர்க்கொடித் தூக்கினர்.
இந்நிலையில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை மாநில அரசு நிராகரிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இது குறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் படி மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு நிராகரிக்க முடியாது என்று கருத்து தெரிவுத்துள்ளார்.
0 Comments