ரஜினியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தரும் ஜீவஜோதி

ரஜினியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தரும் ஜீவஜோதி

in News / Politics

"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ஜெயலலிதாதான் எனக்கு ரோல் மாடல்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து?" என்று தன்னுடைய பேட்டியில் ஒட்டுமொத்த பேரையும் கொண்டு வந்து பாராட்டி தள்ளிவிட்டார் ஜீவஜோதி!

சரவண பவன் ராஜகோபால் மறைவுக்கு பிறகு, திடீரென அரசியலுக்குள் நுழைந்தவர் ஜீவஜோதி.. ஆனால் அன்றைய காலத்திலேயே மறைந்த ஜெயலலிதா மீது அதிக பற்று காட்டியவர்.

கணவர் கொலை வழக்கில் உதவும்படி ஜெயலலிதாவிடம் உதவி கேட்க, அதன்படியே ஜீவஜோதியின் மேல் பரிவையும் அக்கறையையும் காட்டி, நியாயம் கிடைக்க செய்தார் ஜெயலலிதா.. அத்துடன் ஒரு அரசு வேலையும் வாங்கி தந்தார்.

ஜீவஜோதியே கூட தனது பேட்டியின்போது ஜெயலலிதா மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் உயிருடனேயே இருந்திருக்க மாட்டேன் என்று உருக்கமாக கூறியிருந்தார். "ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்திருப்பேன்.. அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்பேன்" என்று ராஜகோபாலுக்கு தண்டனை உறுதியானபோது உணர்ச்சி பெருக்குடன் கூறியவர் ஜீவஜோதி.

தன் பள்ளி தோழரை மறுமணம் செய்து தஞ்சையில் வசித்து வரும், ஜீவஜோதி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, டெய்லர் கடை நடத்தினார்.. இப்போது தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில், மெஸ் ஒன்றை நடத்தி வரும் நிலையில், திடுதிப்பென்று பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. ஜீவஜோதி ஏன் அரசியலுக்குள் நுழைகிறார் என்று கிசுகிசுக்கவும்பட்டது.

இவரது உறவினரான பாஜகவின் கருப்பு முருகானந்தம் முயற்சியால்தான் கட்சியில் இணைந்ததாகவும், அரசியலுக்கு வருமாறு முருகானந்தம் முன்பிருந்தே ஜீவஜோதியை கேட்டு வந்ததால், பாஜகவில் இணைந்துள்ளார் என்றும் தகவல்கள் 3 மாதத்துக்கு முன்பே வெளிவந்தன. இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற பாஜக புதிய மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில், அக்கட்சியின் மாநில செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில், ஜீவஜோதி கட்சியில் இணைந்தார்.

கட்சியில் இணைந்தது குறித்து ஒரு நாளிதழுக்கு ஜீவஜோதி பேட்டியும் தந்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "நான் 3 மாசத்துக்கு முன்பே உறுப்பினராக சேர்ந்து விட்டேன். இப்போது முறைப்படி பொதுச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளேன். அவரது வழிகாட்டுதலின்படியே என் கட்சி பணிகள் இருக்கும். அரசியலில் எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை.. ஆனால் ஆர்வம் நிறைய உள்ளது.

என்னுடைய ரோல் மாடல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான்.. அவரை நான் கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன். நான் இன்னைக்கு உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதாதான். பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவரது திட்டங்களை இன்றைய இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்... அதனால்தான் அவருக்கு ஆதரவு பெருகுகிறது... ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினர் அவரது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கும் வேலையை செய்கிறார்கள்.. இதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்..

பாதுகாப்புக்காக நான் பாஜகவில் சேரவில்லை.. எனக்கு எப்பவுமே பயம் கிடையாது.. பயம் இருந்திருந்தால் இதற்கு முன்பே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திருப்பேன்... தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக அசுர வெற்றி பெறுவதை பார்க்கத்தான் போறீங்க.. குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியினருக்கு புரிதல் இல்லை.. அதனால்தான் குற்றம் சாட்டுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தை நான் ஆதரிக்கிறேன்.. ஏனெனில் பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.. இந்த கெத்து யாருக்கு வரும்.. இந்த விவகாரத்தில் ரஜினிக்குதான் ஆதரவு பெருகி கொண்டு போகிறது" என்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top