கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி

கன்னியாகுமரியின் கற்சிலை கிராமம் மயிலாடி

in Society / Cover Story

மனிதன் கண்ணால் காண முடியாத ஒரே விஷயம் கடவுள். ஆனால் சிற்பிகள் கடவுள்களுக்கு வடிவத்தை கொடுத்து உருவாக்குகிறார்கள். தெய்வங்கள் கல்லால் வடிக்கப்பட்டிருந்தாலும் அதன் முன்பு நின்றுக் கொண்டு தன் நிலைமையைச் சொல்லி வேண்டும் பக்தர்கள் எங்கும் உண்டு. பல கோடி மதிப்புடைய வைரமும், வைடூரியமுமான நகைகளோடு அருள்பாலிக்கும் திருப்பதியும், ஊருக்கு வெளியே காவலாய் கையில் ஆயுதத்தோடு நிற்கும் சுடலைமாடனும், கருப்பசாமியும் சிற்பிகளின் கையில் தான் உருவாகிறார்கள். தமிழர்களின் கலைத்திறனில் முக்கிய அங்கமாக சிற்ப கலை விளங்குகிறது .பெரிய கற்களை உடைத்து அதனை இறைவனாக, இறைவியாக, தலைவனாக ,தலைவியாக, அன்றாடம் பயன்படும் பொருள்களாக்கி விடுகிற தன்மை, சிற்பக் கலைஞனின் சிற்றுளிக்கு உண்டு. சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் சுடுமண் சிலைகள், கள்ளக்குறிச்சி மரச்சிலைகள் வரிசையில், உலகையே வியக்க வைக்கும் கற்சிலைகளுக்கு பெயர் போன கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி. கற்சிற்பத் தொழில் மயிலாடியை மையம் கொண்டு தான் இயங்குகிறது.திருவிதாங்கூர் மன்னர்களால் நாடு முழுவதும் இருந்து சிற்பக்கலைஞர்கள் சுசீந்திரம் தாணுமாலைய பெருமாள் சுவாமி கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது சிலைகள் செதுக்குவதற்காக தமிழகத்தின் பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர்.
5400 சதுர அடி பரப்பளவைக் கொண்டு 134 அடி உயரத்தில் அமையப்பெற்ற இக்கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் முழுமையடைய பல ஆண்டுகள் ஆனதாம். இதனால் தொழிலாளர்கள் நிரந்தரமாக இப்பகுதியில் தங்க ஆரம்பித்து விட்டனர். குமரி மாவட்டம் தவிர கேரளத்தில் உள்ள சிற்பிகளும் ஒரே இடத்தில் தங்கியிருந்து வேலை செய்வதைக் கேள்விப்பட்டு இங்கு வந்து கோயில்களுக்குத் தேவையான சிலைகளை செய்யத் தொடங்கினர். அன்று தொடங்கி இன்றுவரை இவர்களின் கைவண்ணம் உலகமெங்கும் தொடர்கிறது.

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் போதும் , அஞ்சுகிராமம் போகும் வழியில் கல்லோடு உளி மோதும் ஓசை காதில் ஸ்வரம் மாறாத இசையாக ரீங்காரமிடும். மயிலாடி பகுதியில் இரவு பகலாக சிற்பப் பணி நடந்து வருகிறது. திரும்பிய திசை எங்கு பார்த்தாலும் கற்கள் குவிந்து கிடக்கும் .
அங்கு உருவாக்கப்பட்ட சிலைகளுக்கு இடையிடையே, பெருமாள், நடராஜர், ஐயப்பன், காமாட்சி, மீனாட்சி, துர்க்கை, சுடலைமாடன், காமராஜர்,அகத்தியர்,முத்தாரம்மன், சரஸ்வதி என செதுக்கியும், செதுக்காமலும் சிலைகள் கிளைத்து நிற்கின்றன.சுத்தியலின் வேகம் கல்லில் இறங்கக்கூடாது. உளியோட நின்று போக வேண்டும். மனசு, கை, கண், காது என்று எல்லா அவயங்களும் ஒரே நேர்கோட்டுல் வந்து நிற்கும். கல்லுக்குத் தகுந்த உளி இருக்கிறது. ஒரு கல்லைப் பார்த்தவுடனே அதுக்குள் இருக்கிற சிலையை கண்கள் கண்டுபிடிச்சிடுமாம் சிலைக்கு மேலே ஒட்டியிருக்கிற கற்களைப் பெயர்த்து எடுக்கிறது மட்டும்தான் சிற்பியோட வேலை.இன்றைக்கு சிற்பத்தொழிலில் பல நவீனங்கள் புகுந்துவிட்டன. பண்டையக்காலத்தில் எவ்வளவு பெரிய சிலையாக இருந்தாலும், உளியும் சுத்தியலும் வைத்துதான் வாட்டப்படுத்துவார்கள். கல்லை வெட்டியெடுக்க நாள்கணக்கில் உளியை வைத்து தட்டிக்கொண்டு இருப்பார்கள். இப்போது மெஷின் வந்து விட்டது .பெரிய கல்லை சேதாரமில்லாமல் நொடிப்பொழுதில் வெட்டிப் போட்டுவிடுகிறது.மெஷின் வந்தாலும் உளியும், சுத்தியலும் தான் சிலைக்கு உயிர் கொடுக்கிறது. இந்தச் சிற்பத்தொழில் தெய்வீக அம்சம் கொண்டது. சிற்பியின் கைபட்டு உருவாகிற சிற்பம் கோடிக்கணக்கான பக்தர்கள் வணங்குகிற சிலையாக கருவறைக்குள் போகிறது. அதனால் கட்டுப்பாட்டோடும், பய உணர்வோடவும் சிற்பிகள் இருக்கிறார்கள். முதலில் கல்லில் கரித்துண்டால் சிற்பத்தை ஓவியமாக வரைந்துக் கொள்கிறார்கள். அதன்பின் அடையாளங்களை குறித்துக் கொண்டு செதுக்கத் தொடங்குகிறார்கள். எல்லா பாகங்களும் செதுக்கி முடித்ததும் விரதம் இருந்து, பூஜை செய்துதான் கண் திறக்கிறார்கள். இதற்கென சிற்ப மந்திரங்கள் இருக்கிறது.முன்னோர்கள் மூலமாக வழிவழியாக இதைக் கற்றுக் கொள்கிறார்கள்.அப்படி கண் திறக்கப்படுற சிற்பத்துக்குத்தான் தெய்வீக அம்சம் இருக்கும் என்கிறார்கள் சிற்பிகள்.சிற்பங்கள்
மட்டுமின்றி கோயிலுக்கான தூண்கள்,காமராஜர், நேரு, முத்து ராமலிங்க தேவர்,சிவாஜி போன்ற தலைவர்களின் சிலைகளும் செய்கிறார்கள்.

கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி
சிலைகளை வடிப்பதற்கான பாறாங்கற்கள் மதுரையை ஒட்டியுள்ள பேரையூர், தேனி ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் சுப்புலாபுரத்திலும் ,குமரிமாவட்டம் மயிலாடியிலும் தான் கிடைக்கின்றன. இந்த இடங்களில் கிடைக்கும் கருப்புக்கல்லில் தான் தெய்வங்களின் சிலைகளையே வடிக்க முடியுமாம் .மயிலாடியிலிருந்து தமிழகத்தை விட கேரளா, கர்நாடகாவுக்குத்தான் அதிக சிலைகள் செல்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. லண்டன் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவில் உள்ள நடராஜர் சிலை ஆகியவை மயிலாடி மண்ணில் இருந்து கொண்டுப் போனவை .சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இசைத் தூண்கள், மயிலாடி சிற்பிகளின் கலை திறன் தான். கேரளாவின் ஆற்றுக்கால் பகவதியம்மன் கருவறை சிற்பமும் இங்கு உருவானது தான். உலகம் முழுதும் இருக்கின்றன மையிலாடி சிற்பங்கள்.
மயிலாடி தவிர, சேந்தன்புதூர், காமராஜர் நகர், மார்த்தாண்டபுரம், வழுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சிற்பிகள் வசிக்கிறார்கள். சிற்பத்தொழில் சார்ந்த பிற தொழில்களும் இப்பகுதியில் நிறைந்துள்ளன.தத்ரூபமாகச் செதுக்கப்படும் சுவாமி சிலைகள் பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, ராஜஸ்தான்,குஜராத் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அம்மி, உரல், எல்கைக் கற்கள் உள்ளிட்டவைகளும் இங்கு தயார் செய்யப்படுகின்றன. சிலைகள் செய்வதற்காக 100-க்கும் மேற்பட்ட சிறு பட்டறைகளும், 15-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களும் மயிலாடி சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ளன.

கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி
அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்த சிற்பத்தொழிலை ஒருங்கிணைத்து ஒரு வடிவம் கொடுத்து பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது சுப்பையா ஆசாரி என்பவர். அவர் 1975-ம் ஆண்டு மயிலாடி கற்சிற்பத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினார். இந்த சங்கம் உருவான பின்தான் மயிலாடி சிலைகளின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை, கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் சிலை ஆகியவை மயிலாடி சுப்பையா ஆசாரியினால் உருவாக்கப் பட்டவை . நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நாகர்கோவில் வந்தால் மயிலாடிக்குப் போகாமல் சென்னை திரும்பமாட்டாராம். மயிலாடி கிராமத்தில் தெருத்தெருவாக நடந்து சிற்பம் வடிக்கும் தொழிலைப் பார்வையிடுவாராம். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். சிவாஜியின் தாயார் உருவச்சிலையை அற்புதமாக செதுக்கிக் கொடுத்திருக்கிறார் சுப்பையா ஆசாரி . "அம்மா உயிர்பெற்று நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது’ என்று சிவாஜி மகிழ்ச்சி அடைந்தாராம் . அதன் பின் அவரது விருப்பத்திற்குரிய இடமாக மயிலாடி மாறிவிட்டது. இப்படி மயிலாடியின் சிலையழகில் மயங்கிப்போன பல பிரபலங்களும் உண்டு.

கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி

கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி

கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி

கன்னியாகுமரியின்  கற்சிலை கிராமம் மயிலாடி

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top