இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டால் முஷாரப் உடலை தரதரவென இழுத்து வந்து 3 நாள் தொங்க விட வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001ஆம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். அதுமட்டும் இல்லாமல் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம்தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15ஆம் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. பின்னர், 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் ஜெனரல் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார். 2016ஆம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் பின்னர் நாடு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தேச துரோக வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 17ஆம்தேதி சிறப்பு கோர்ட்டில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 நீதிபதிகள் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தீர்ப்பு முழு விவரம் வெளியாகியுள்ளது. அதில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் குற்றவாளி என தெளிவாக உணர்ந்துள்ளோம். எனவே தண்டனை விதிக்கப்பட்ட அவரது கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்க விட வேண்டும். ஒரு வேளை தூக்கிலிடப்படும் முன்பே முஷரப் இறந்து விட்டால், அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் (சென்டிரல் சதுக்கம்) பகுதிக்கு தரதரவென இழுத்து வந்து 3 நாட்களுக்கு தொங்க விட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது முஷரப் தரப்பிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments