படகு பழுதானதால் குமரி மீனவர்கள் உள்பட 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு!

படகு பழுதானதால் குமரி மீனவர்கள் உள்பட 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு!

in News / Local

குமரி மாவட்டம் தூத்தூர் சின்னத்துறையைச் சேர்ந்தவர் ஷிபு. இவருக்கு சொந்தமாக ஸ்டார் ஆப் ஸீ-1, ஸ்டார் ஆப் ஸீ-2 என இரு விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகள் கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி 2 விசைப்படகுகளிலும் கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்தவர்கள் 2 பேரும், சின்னத்துறையை சேர்ந்த படகு உரிமையாளர் ஷிபு உள்பட 3 பேரும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், காக்கிநாடாவை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 20 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 18-ந்தேதி லட்சத்தீவு அருகே ஆழ்கடல் பகுதியில் 150 கடல் மைல் இடைவெளியில் 2 படகுகளிலும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக ஒரு விசைப்படகின் என்ஜின் பழுதடைந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் 2-வது படகுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து 2-வது படகு மூலம் மீனவர்கள் அப்பகுதிக்கு சென்று என்ஜின் பழுதை நீக்க முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே, படகை கரைக்கு கட்டி இழுத்துச் செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் படகை இழுத்து வந்த போது, துரதிஷ்டவசமாக, 2-வது விசைப்படகும் பழுதானது. இதனால், அதிர்ச்சி அடைந்தனர் மீனவர்கள், உதவிக்கு அந்த பகுதியில் எந்த மீன்பிடி படகுகள் வராததால், ஆழ்கடலில் 2 விசைப்படகுகளுடன் 20 மீனவர்கள் தத்தளிக்கிறார்கள். தகவல் தெரிவிப்பதற்கு செல்போன் தொடர்பும் கிடைக்கவில்லை.

பின்னர், தங்களிடம் பாதுகாப்புக்காக வைத்திருந்த வள்ளத்தின் மூலம் ஷிபு உள்பட 3 மீனவர்கள் அருகில் உள்ள சித்ரா என்ற தீவுக்கு சென்று அங்கிருந்து இதுபற்றி கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கும், குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், மீனவர்களை மீட்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் மீனவர்கள் கொண்டு சென்ற குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் முடிந்து விட்டதால், குடிக்க தண்ணீரும், உணவும் இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்து வருகிறார்கள். மேலும், தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சக மீனவர்களும் அவர்களை விசைப்படகில் சென்று மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆழ்கடலில் பழுதான 2 விசைப்படகுகளுடன் தத்தளித்து கொண்டிருக்கும் 20 மீனவர்களை உடனடியாக மீட்க மாவட்ட நிர்வாகமும், மத்திய-மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்களும், தெற்காசிய மீனவர் தோழமை பொதுசெயலாளர் சர்ச்சிலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top