மார்த்தாண்டம் அருகே முகநூலில் கருத்து பதிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் நடிகர் விஜய் ரசிகர் தாக்கப்பட்டார். அவரை தாக்கிய அஜித் ரசிகர்கள் 16 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே செம்மங்காலை தேரியாமூட்டுவிளையை சேர்ந்தவர் செல்வன்(வயது 54), தொழிலாளி. இவருடைய மகன் ராஜேஷ்(23). இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். சம்பவத்தன்று, அதே பகுதியை சேர்ந்த நடிகர் அஜித் ரசிகரான எட்வின் என்பவர் முகநூலில் விஜய் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ராஜேஷ் ஒரு கருத்தை பதிவு செய்தார். இதை கண்ட எட்வின் ஆத்திரமடைந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ் வீட்டில் தனது தந்தை செல்வனுடன் இருந்தார். அப்போது, தனது நண்பர்களான 15 பேருடன் எட்வின் திடீரென ராஜேசின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் ராஜேஷை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்த னர். மேலும், தடுக்க வந்த செல்வனையும் மரக்கட்டையால் தாக்கப்பட்டார். இதில் செல்வனின் பற்கள் உடைந்தன. இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து செல்வன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தந்தை- மகனை தாக்கிய எட்வின் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரும் அஜித் ரசிகர்கள் என்று கூறப்படுகிறது.
0 Comments