நாகர்கோவில் இரட்டைக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

நாகர்கோவில் இரட்டைக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

in News / Local

நாகர்கோவில் வண்டிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேச பெருமாள்குமார். இவருடைய மகன் அர்ஜூன் (வயது 17). இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (21), கட்டிட தொழிலாளி. கடந்த 7-ந் தேதி அர்ஜூனும், அஜித்குமாரும் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ஒரு மர்ம கும்பல் அவர்களை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த இரட்டைக்கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதத்தில் நடந்த இந்த கொலை வழக்கில் என்.ஜி.ஓ. காலனி அருகே காமராஜ் சாலையை சேர்ந்த ரமேஷ் (30), ராமச்சந்திரன் என்ற மோகன் (31), வண்டிக்குடியிருப்பு அழிச்சன்காட்டுவிளையை சேர்ந்த சுந்தர் (27), நிஷாந்த் (20) ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் 4 பேரையும் தேடி வந்தனர். இரட்டைக்கொலையை அரங்கேற்றியதும் 4 பேரும் தலைமறைவானார்கள்.

பின்னர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ரமேஷ், சுந்தர் ஆகிய 2 பேரும் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதனையடுத்து இருவரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு ரமேஷ், சுந்தரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது, முன்விரோத தகராறில் மோதி பார் என சவால் விட்டதால் 2 பேரையும் கொன்றதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர். நிஷாந்த், ராமச்சந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நிஷாந்த் வெளியூர் தப்பி செல்வதற்காக வல்லன்குமாரன்விளை பஸ் நிறுத்தத்தில் நின்ற போது கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

ராமச்சந்திரன் மட்டும் போலீசிடம் சிக்காமல் இருந்தார். ஆனால் சிலர் கொடுத்த ரகசிய தகவல் மற்றும் ராமச்சந்திரனின் செல்போனை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் குமரி மாவட்டத்திற்குள்ளேயே தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்ததில், என்.ஜி.ஓ. காலனி பஸ் நிறுத்தத்தில் நேற்று நிற்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து அதிரடியாக சென்ற தனிப்படை போலீசார் ராமச்சந்திரனை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெளியூர் தப்பி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top