கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வுநிலை காரணமாக நேற்று, சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு ஏற்றி செல்லும் படகு சேவை பாதிக்கப்பட்டது.
சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழும் கன்னியாகுமரிக்கு இந்தியாவில் இருந்து மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு தற்போது ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பயணிகள் இவற்றைப் பார்வையிடும் வகையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாள்களாக கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுசேவை பாதிக்கப்பட்டது. இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதன் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை படகு இயக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில் கடல் நீர்மட்டம் பிற்பகல் 12.30 மணியளவில் சீரானதை அடுத்து, பகல் ஒரு மணிக்கு தொடங்கிய படகுப் போக்குவரத்து மாலை வரை இயக்கப்பட்டது. படகு சேவை பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினார்..
0 Comments