பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நாகர்கோவில் வருகை!

பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நாகர்கோவில் வருகை!

in News / Local

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பிலான முதல் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நாளை (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வருகிறார். இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், செயல் தலைவர் வசந்தகுமார், முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

பொதுக்கூட்டத்துக்காக ராகுல்காந்தி நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் வருகிறார். இதையொட்டி ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானம், ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பகுதி, பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு ஹெலிகாப்டர் வந்திறங்குவதற்கான ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணியும், மேடை அமைப்பதற்கான பணிகளும் நேற்று தொடங்கியது. இதை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். இந்த பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ராகுல்காந்தி பங்கேற்க உள்ள தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி காதர்மொய்தீன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகளை வரவேற்று நாகர்கோவில் நகரம் முழுவதும் வரவேற்பு பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அமைக்கும் பணியை அந்தந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை மேடை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பார்வையிட்டார். செயல் தலைவர்கள் வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் புரூஸ், அசோகன் சாலமன் மற்றும் நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

பின்னர் வசந்தகுமார் எம்.ஏல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குமரி வேட்பாளர் பற்றி ராகுல்காந்தி தேர்வு செய்வார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top