கன்னியாகுமரி அருகே மனநல காப்பகத்தில் தங்கியிருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள அச்சன்குளத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து காப்பகத்தில் தங்கி இருந்த 66 பேரின் ரத்தம்- சளி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அங்கு தங்கி இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 7 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் 39 பேர் காப்பகத்திலும் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, அகஸ்தீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்கீஸ் ராஜா ஆகியோர் அந்த காப்பகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு கிருமிநாசினி தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
0 Comments