பின்னோக்கி ஓடிய டெம்போ ரப்பர் தோட்டத்தில் கவிழ்ந்து; டிரைவர் சாவு!

பின்னோக்கி ஓடிய டெம்போ ரப்பர் தோட்டத்தில் கவிழ்ந்து; டிரைவர் சாவு!

in News / Local

திருவட்டார் அருகே பூவன்கோடு, பச்சாத்துவிளையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், வயது 45. சொந்தமாக டெம்போ ஓட்டி வந்தார். நேற்று காலையில் முளவிளை பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டுக்கு டெம்போவில் பாறைபொடி ஏற்றிக்கொண்டு சென்றார். அந்த வீடு மேடான பகுதியில் உள்ளது. ஜெயசந்திரன் வீட்டின் அருகே பாரத்துடன் டெம்போவை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

அப்போது, எதிர்பாராத விதமாக டெம்போ பின்னோக்கி தானாக உருண்டு ஓட தொடங்கியது. இதை பார்த்த ஜெயச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, ஜெயச்சந்திரன் டெம்போவை நிறுத்துவதற்காக அதனுடன் வேகமாக ஓடினார். அவர் டெம்போவை பிடித்து தொங்கிய நிலையில் டிரைவர் இருக்கையில் அமர முயற்சித்த பொது, டெம்போ தாழ்வான பகுதி நோக்கி உருண்டு ஓடி அருகில் இருந்த பள்ளமான பகுதியில் ரப்பர் தோட்டத்திற்குள் கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஜெயச்சந்திரனுக்கு ஷீஜா (40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தானாக உருண்டு ஓடிய டெம்போ கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top