ஆழ்கடலில் பரிதவித்த குமரி மீனவர்கள் மீட்பு

ஆழ்கடலில் பரிதவித்த குமரி மீனவர்கள் மீட்பு

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த லாசருக்கு சொந்தமான விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ரிச்சர்ட் ,மார்த்தாண்டன்துறையை சேர்ந்த சர்ஜன் வியாகுல அடிமை , ஸ்டீபன் , பாத்திமாபுரத்தை சேர்ந்த வர்க்கீஸ் , இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜோபின், டோவின், கேரளாவை சேர்ந்த 4 பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 14 பேர் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் மராட்டிய மாநிலம் ரத்தினகிரி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு என்ஜின் திடீரென பழுதடைந்தது. இதனால், கரை திரும்ப முடியாமல் மீனவர்கள் பரிதவித்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சக மீனவர்களிடம், படகு பழுதாகி விட்டது, கரை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உதவ முன்வரவில்லை என தெரிகிறது.

இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜோஸ் வில்பினுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ரெத்தினகிரி பகுதி மீனவர்களின் உதவியுடன் ஆழ்கடலில் தவித்த 14 மீனவர்களும், அவர்களது படகும் மீட்கப்பட்டு மாராட்டிய மாநிலம் மிரியபந்தர் பகுதியில் நேற்று அதிகாலையில் கரை சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே பத்திரமாக மீட்கப்பட்ட மீனவர்கள் பழுதான படகை சரி செய்ய முடியாமலும், மொழி தெரியாமலும் தவிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் வந்து சேர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்களும், தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜோஸ் வில்பினும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top