குமரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் ஒரு மாதமாக மாவட்டத்தில் நீடித்து வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.அதேபோல் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சம் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் கன்னியாகுமரி, சுசீந்திரம் , நாகர்கோவில், மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது .இதனால் நகரின் முக்கிய சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளை கடக்க முடியாமல் வெள்ளப் பெருக்கில் சிக்கினர் .அதேபோல் மலையோர பகுதிகளிலும் கனமழை பெய்தது.மாவட்டம் முழுவதும் பெய்த இந்த கனமழையால் கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments