தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

in News / Local

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருடனான ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், ஒவ்வொரு சிகிச்சை மையத்திலும் நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் அவர் கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டிய உணவு உள்ளிட்ட வசதிகள், பரிசோதனை முறை குறித்தும், மாவட்டத்துக்கான தேவைகள் குறித்தும் பேசினர். அதற்கு அமைச்சர்கள் முன்னிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், உதவி கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மீனவர் கூட்டுறவு சங்க மாநில தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் விரிவான ஆய்வு கூட்டம் நடந்தது. டாக்டர்கள், செவிலியர்களின் சேவைகள் குறித்தும், குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதித்தோம். குறிப்பாக மிக சிறப்பாக டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதனால்தான் குமரி மாவட்டத்தில் 964 பேரை குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அது பாராட்டுக்குரியது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும்தான் 18 லட்சத்து 4 ஆயிரத்து 170-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 பேரை இதுவரை நாம் குணப்படுத்தி உள்ளோம். கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் தொற்று உள்ள கர்ப்பிணிகளை தனிமைப்படுத்தும் பிரசவ வார்டில் அனுமதித்து, பிரசவம் பார்த்து அந்த தாயையும், சேயையும் குமரி மாவட்டத்தில் குணப்படுத்தி அனுப்பும் அளவுக்கு மருத்துவ வசதிகளை நாம் மேம்படுத்தியிருக்கிறோம்.

தமிழகத்தில் அதிகப்படியாக, குமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதுதான் ஆரம்ப நிலையிலேயே தொற்றை கண்டுபிடிக்க முடியும். அதன்மூலம் அவர்களை மருத்துவமனையிலேயோ, கவனிப்பு மையங்களிலேயோ அனுமதிக்கும்போது இந்த நோயை குணப்படுத்த முடியும்.

அதனால்தான் இன்றைய நிலையில் வளர்ந்த நாடுகளோடு நமது நாட்டை ஒப்பிடும்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நமது மருத்துவத்துறையின் செயல்பாடுகளுக்கு நோயாளிகளிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக முதல்அமைச்சரின் வழிகாட்டுதலோடு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் மருத்துவ வல்லுனர்கள் கணித்து சொல்ல முடியாத அளவில் இந்த கிருமி இருந்து வருகிறது. இருந்தாலும் மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர்., உலக சுகாதார நிறுவனம், மருத்துவ வல்லுனர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டுத்தான் முதல்அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. 75 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் எல்லா நோயாளிகளுக்கும் உயர்வான சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் நம்மிடம் மருத்துவமனைகள் உள்ளன.

குமரி மாவட்டத்தில் 300 படுக்கைகளுக்கு ஆக்சினேசன் லைன் கொடுத்துள்ளோம். இன்னும் இதை அதிகப்படுத்த கூறியுள்ளோம். தமிழகம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகள், தாலுகா அல்லாத மருத்துவமனைகளிலும் ஆக்சினேசன் வசதியோடு படுக்கை வசதிகள் அதிக அளவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளையும் ஒருபுறம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும் உலக அளவில் அச்சுறுத்தக்கூடிய இந்த வைரசுக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததுதான். கொரோனா சமூக பரவலா? இல்லையா? என்பதை மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர்.தான் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இதுவரை சமூக பரவல் இல்லை என்று மத்திய அரசு உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நமது முதல்-அமைச்சர் கூறியது போன்று தனிமனிதனின் வாழ்வாதாரம் ஒருபுறம் முக்கியம் என்றாலும், பொருளாதார வளர்ச்சியும் முக்கியம். ஆனாலும் நோய் பரவலையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து நிதிகளையும் மாநில நிதியில் இருந்து செய்து கொடுக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு சத்தான, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட உணவுகளை வழங்கவும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் அவுட்சோர்சிங் முறையில் உணவுகளை தயாரித்து கொடுக்க கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்து கொள்ளப்படும். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரமும் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் டயட் சார்ட்படி நோயாளிகளுக்கு உணவுகளை வழங்க குமரி கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்துதலில் வைப்பதற்கு மத்திய அரசுதான் அனுமதிக்க வேண்டும். வீட்டு தனிமைப்படுத்துதலில் எப்போது வைக்க வேண்டும் என்றால் ஒரு நோயாளியின் வீட்டில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். அவருக்கு அறிகுறியும் இருக்க கூடாது. எந்த பிற நோய்களும் இருக்கக்கூடாது. அவர்கள் வீட்டில் தனி குளியலறை உள்ளது, தனி அறை உள்ளது, என்னால் யாருக்கும் தொற்று பரவாது என்று செல்ப் டெக்லரேஷன் கொடுக்க வேண்டும்.

நமது முன்னுரிமை அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பதுதான். சென்னையில் 50 சதவீதத்துக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் 80, 90 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்திலும் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறோம். வீட்டுத் தனிமைப்படுத்துதலை தவிர்ப்பது நல்லது. வீட்டு தனிமைப்படுத்துதலை அனுமதிப்பது இல்லை. கொரோனா கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top