கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கருதப்படுகிறது. ஆனால் அந்த ரயிலை மாற்று ரயிலாக ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. முதலில் பெங்களூருவுக்கு ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் சென்னைக்கு தாமதமாக புறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில மாதங்களாக தனி ரெயிலாக இயக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 15–ஆம் தேதி முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பகல் வேளையில் நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்படுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரயில்வே நிர்வாகத்தின் இந்த மாற்று முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசை மீண்டும் தனி ரயிலாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
கொச்சுவேளி பாசஞ்சர் ரயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததால், இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனையின் முடிவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரயிலாக மாற்றி இயக்குவதை கைவிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரசை மீண்டும் தனி ரயிலாக இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதனால் இன்று முதல் நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இனி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்படும். இந்த தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரயிலாக இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அமிர்தா ரயில் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments