தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கோவை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களாக, மழையினால் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் சேவை, நேற்று காலை தான் தொடங்கியது. இதை தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததின் காரணமாக தற்போது இதன் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments