கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் வாழையத்துவயல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 40), தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவரது வீடு தடிக்காரன்கோணம்- கீரிப்பாறை செல்லும் சாலையோரத்தில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் முருகேசன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென முருகேசன் மீது மோதியது. இதில் முருகேசன் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். வீட்டு முன் நின்ற முருகேசன் பஸ் மோதி இறந்து கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மாலா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments