மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் தாய்- குழந்தை பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரி முன்பாக உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது!.

மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் தாய்- குழந்தை பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரி முன்பாக உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது!.

in News / Local

மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் நங்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜின், வயது 27. இவர்,அங்குள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மெர்லின் திவ்யா, வயது 27.. இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதற்கிடையே மெர்லின் திவ்யா கர்ப்பமானார். அவர், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அடிக்கடி பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மெர்லின் திவ்யாவுக்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர், அந்த தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்ந்தார்.

நேற்று காலை 9.30 மணி அளவில் மெர்லின் திவ்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டாக்டர்கள் அவரை பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று டாக்டர்கள் கூறினர். இதனால் கணவர் விஜின் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவர்களது மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. திடீரென மெர்லின் திவ்யாவுக்கும், அந்த குழந்தைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தாய்- மகள் இருவருக்கும் டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் அவர்களது உடல்நிலை தொடர்ந்து மோசமானதாக தெரிகிறது.

உடனே ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு தாய், குழந்தை இருவரும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு விஜின் மற்றும் குடும்பத்தினர் அதிர்ந்து போயினர்.. மெர்லின் திவ்யா, அவருடைய குழந்தை உடலை பார்த்து விஜின் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மெர்லின் திவ்யா, அவருடைய குழந்தை உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மெர்லின் திவ்யா, அவருடைய குழந்தை இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிய வந்தது. உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இறந்த தாய்- குழந்தை இருவரது உடல்களும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர்கள் குழு பரிசோதனை செய்த பிறகுதான் தாய்- குழந்தை சாவுக்கான காரணம் பற்றிய விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் ஆஸ்பத்திரியில் மெர்லின் திவ்யாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top