கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இ-பாஸ் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து ஹைடெக் விபச்சாரம் நடத்திய 3 புரோக்கர்கள் உட்பட 7 பேர் கைது. நாகர்கோவில் போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விபச்சார தொழிலில் ஈடுபடும் நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு இளம் பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள், தற்போது சிபிசிஐடி அலுவலகம் அமைந்துள்ள சற்குணம் வீதியில் கோழிக்கடை மற்றும் அதற்கு பின்னால் உள்ள வீடு ஆகியவை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் நடத்தி வருவதாக நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கோழிக்கடை வழியாக செல்லும் வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள், அவர்களை ஈடுபடுத்திய ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஜோசப், வள்ளியூர் பகுதியை சேர்ந்த மகேஷ், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மகேஷ், நெல்லை யை சேர்ந்த சுரேஷ் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை மாவட்ட எல்லைகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் இ- பாஸ் இல்லாமல் அழைத்து வருவதும் தெரிய வந்தது.
இளம்பெண்களின் புகைப்படங்களை புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பி வைப்பதாகவும், இளம் பெண்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதால், ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பெண்கள் கடத்தப்படுவது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments