வழுக்கம்பாறை அருகே பொதுமக்கள் அமைத்த பாதையை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
வழுக்கம்பாறை அருகே பல்பநாபன்புதூரில் கல்வெட்டான்குழி குளம் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி துறை சார்பில் குளத்தை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது, தூர் வாரப்பட்ட மண்ணை வெளியே கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை குளத்தின் கரையோரம் குவித்து வைத்திருந்தனர்.
தற்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நான்குவழி சாலையில் இருந்து பல்பநாபன்புதூருக்கு செல்ல குளத்தின் கரையில் வைக்கப்பட்டிருந்த மண் குவியலை பாதையாக அமைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதையாக அமைக்கப்பட்டிருந்த மண்குவியலை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆஸ்டின் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் சமரசபேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊருக்குள் செல்ல புறம்போக்கு நிலத்தில் பாதை அமைப்பதை அதிகாரிகள் தடுக்கிறார்கள் என பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதுகுறித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் செல்போன் மூலம் பேசினார்.
தகவல் அறிந்த நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊருக்கு செல்ல மாற்று வழிப்பாதை அமைத்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments