அதிமுகவும், அமமுகவும் இணையப் போகிறது என்று பல்வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் முதல் கட்டமாக இந்த இணைப்பை குமரி மாவட்டத்தில் அமல்படுத்திவிட்டோம் என்று கூறுகிறார்கள் அம்மாவட்ட அதிமுகவினர்.
அமமுகவின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பச்சைமால், அமமுகவின் எம்.ஜிஆர். மன்ற இணைச் செயலாளரான நாஞ்சில் முருகேசன் ஆகியோர் மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான அமமுக நிர்வாகிகளோடு நேற்று (நவம்பர் 5) முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய சென்னையில் முகாமிட்டனர்.
இப்போதைய அதிமுக மாவட்டச் செயலாளர் அசோகன் சில மாதங்களுக்கு முன் பச்சைமாலின் வீடு தேடிச் சென்று, ‘நீங்கள் எல்லாம் அதிமுகவுக்கு வரவேண்டும்’ என்று சால்வை போட்டு அழைப்பு விடுத்தார், அப்போது அவரை வரவேற்று உபசரித்த பச்சைமால், ‘வீடு தேடி வந்தவர்களை வரவேற்பது இயல்பு. ஆனால் அதிமுகவில் சேரமாட்டேன்’ என்று மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் இப்போது அமமுக நிர்வாகிகளோடு அதிமுகவில் இணைகிறார்.
இதுபற்றி குமரி அதிமுகவினரிடம் பேசியபோது, “அதிமுகவில் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக பவர்ஃபுல்லாக இருந்தவர் பச்சைமால். ஆனால் பின்னர் நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் இருவருக்கும் கடுமையான உரசல் ஏற்பட்டது. தளவாய் சுந்தரத்துடனான மோதல் காரணமாகவே அமமுகவுக்கு சென்றார் பச்சைமால்.
இப்போது தளவாய் சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக இருக்கும் நிலையில் மீண்டும் பச்சைமாலிடம், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற உங்கள் உதவி தேவை என்று சமரசம் பேசப்பட்டு அழைக்கப்பட்டிருக்கிறார். அனேகமாக இப்போது மாவட்ட செயலாளராக இருக்கும் அசோகனுக்கு பதில் பச்சைமால் மாவட்ட செயலாளராக ஆக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை” என்கிறார்கள்.
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் குமரியில் பிரபலமான அருமனை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு இந்த வருடமும் தினகரன் வருகிறார். பச்சைமால் பின்னால் பெரும்பாலான அமமுக நிர்வாகிகள் சென்றுவிட்ட நிலையில், கிறிஸ்துமஸ் விழாவுக்கு வருகை தர இருக்கும் தினகரனுக்கு பெரிய அளவில் வரவேற்பு தர வேண்டும் என்று இப்போதே அமமுகவினருக்கு உத்தரவு போயிருக்கிறது.
பச்சைமால் அதிமுகவில் சேரும் முன்னரே அமமுகவில் குமரிக்கு என பொறுப்புக் குழுவை நியமித்துவிட்டார் தினகரன்.
0 Comments