கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், கடல் வழி குற்றங்களை கண்காணிக்கவும், 4 அதிநவீன படகுகள் குமரி கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு வழங்கப்பட்டன.
இந்த அதிநவீன படகுகள் மூலம் தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கடலோர பகுதியை கண்காணிக்கும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 4 அதிநவீன படகுகளும் பழுதாகியதால் மீனவர்களிடம் இருந்து வாடகைக்கு படகை எடுத்து கடலோர பகுதிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பழுதான படகுகளில் 2 சீரமைக்கப்பட்டு, மீண்டும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நேற்று முதல் அதி நவீன படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனால் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், கடலோர பகுதிகளில் கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 4 அதி நவீன படகுகளும் பழுதாகின.
படகுகள் பழுதால் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு, அதிநவீன படகுகளை சீரமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், முதல் கட்டமாக 2 படகுகள் சீரமைக்கப்பட்டன. மீதமுள்ள 2 படகுகளை சீரமைக்கும் பணி விரைவில் நிறைவு பெறும். சீரமைக்கப்பட்ட படகுகள் நேற்று முதல் கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments